ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை நீட்டிப்பதை எதிர்த்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை நீட்டிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி கடந்த மே 8ம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு, இளைஞர்களின் வேலை  வாய்ப்பைப் பறிக்கும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 58-லிருந்து 59 ஆக உயர்த்திய அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும் என பல எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியுள்ளது,  நேர்மையாக நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை ஒரு ஆண்டுகள் நீட்டிப்பதில் எந்த தவறும் இல்லை.

அதே வேளையில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை  விசாரணை நிலையில் உள்ளவர்களுக்கும் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்களுக்கும் எதிரானது. எனவே  ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளவர்களுக்கான ஓய்வு பெறும் வரை நீட்டித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது இன்று மீண்டும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு அபராதம் விதிக்கத்தக்கது தான் என்ற போதும், அதை தவிர்ப்பதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: