மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் விநியோகம்

காஞ்சிபுரம்: கொரோனா ஊரடங்கால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த 3ம் தேதிமுதல் பாடப் புத்தகங்களை, அந்தந்த பள்ளிகள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி இலவச பாடப்புத்தக விநியோகம் தொடங்கியது. காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இலவச பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் இடைவெளியோடு முககவசம் அணிந்து வந்து, புத்தகங்களை பெற்றுச்சென்றனர். முன்னதாக, மாணவர்கள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வைக்கப்பட்டு இருந்தது. முககவசம் இல்லாத மாணவர்களுக்கு, பள்ளி சார்பில் முககவசமும் வழங்கப்பட்டது.

Related Stories: