கந்து வட்டி, இருசக்‍கர வாகன மோசடி வழக்கு: காசி மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்..!

கன்னியாகுமரி: கந்துவட்டி மற்றும் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காசி மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் மருத்துவர் உட்பட தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலமாக 100க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம், போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே நாகர்கோவிலை சேர்ந்த பிரைட் என்ற இளைஞருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக காசி மீது வடசேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வட்டார போக்குவரத்து தரகரான நாராயணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கந்து வட்டி மற்றும் இருசக்கர வாகன மோசடி தொடர்பாக காசி, அவனது தந்தை தங்கபாண்டியன், வட்டார போக்குவரத்து தரகர்  நாராயணன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Related Stories: