விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இந்து அமைப்பு தலைவர்களோடு தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து இந்து அமைப்பு தலைவர்களோடு தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நகர் பகுதிகளில் முக்கிய இடங்களில் பல அடி உயர விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். ஒரு வாரத்திற்கு பிறகு இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக அந்த சிலையை எடுத்துச் சென்று கடற்கரை பகுதிகளில் கரைப்பது வழக்கம். ஆனால், தற்போது தமிழகத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் இந்து அமைப்பு தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், வருகிற 22ம் தேதி விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories: