ஊரடங்கால் வீட்டை விட்டு வெளிவரமுடியாததால் மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், சத்துணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கிவந்த முட்டைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு  இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரியும் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டிருந்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சத்துணவு கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண் குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கி வருகிறார்கள்.

கொரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது என்றார். இதை கேட்ட நீதிபதிகள், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு அரசு ஆசிரியர்கள் பணியின்றி வீட்டில் இருக்கும் இந்த சூழலில், அவர்கள் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது. முட்டை வழங்குவதில் சமூக இடைவெளி பிரச்னை ஏற்படும் என்றால் டாஸ்மாக் கடைகளை ஏன் திறந்தீர்கள். அதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்று கருத்து தெரிவித்தனர்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, முட்டை வழங்கும்போது சமூக இடைவெளி சிக்கல் ஏற்படும் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரேஷன் பொருட்களுடன் மாணவர்களுக்கு முட்டையை வழங்கலாம். சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோரை அழைத்து வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ முட்டை வழங்க வேண்டும். மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: