தமிழக அரசின் வழிகாட்டுதல்களை ஆன்லைன் வகுப்பு நடத்தும் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் விமல் மோகன் சார்பில் வக்கீல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்றார்.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த வேண்டும்  ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு, இந்த விதிமுறைகள் வெறும் பரிந்துரை அடிப்படையில் இருப்பதாகவும், இதை அமல்படுத்த முடியாது எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட அரசு வக்கீல், அரசாணையை முழுமையாக படிக்காமல், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஆன்லைன் வகுப்புகள் அனைத்து தரப்பு மாணவர்களும் பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதால், இந்த வழக்கில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர் சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ் பத்திரிகையில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது என தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், ஆன்லைன் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: