கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், தற்போது பெய்த மழையால் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இருந்து ரெட்டம்பேடு வழியாக பஜாருக்கு செல்லும் சாலை நடுவே மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குட்டையாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் ஆத்துப்பக்கம், வழுதலம்பேடு, மங்காவரம், பட்டுபுள்ளி, நத்தம், அயநெல்லுர், குருவி அகரம், அப்பாவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அவதிப்படுகின்றனர்.