கேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணை..!!

சென்னை: கேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக  சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தங்கக்கடத்தல் விசாரணை தற்போது தமிழகத்தை நோக்கி வந்திருக்கிறது. கேரள தங்கக்கடத்தலில் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில், தங்கமானது பெரும்பாலும் தமிழகத்திலும், மகாராஷ்டிராவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக திருச்சியிலும், சென்னையிலும் தங்கம் விற்கப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அந்த அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரி வந்தனா தலைமையிலான 5 அதிகாரிகள் கொண்ட குழு சென்னையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது ரகசிய விசாரணையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளத்துக்கு கடத்திவரப்பட்ட தங்கம் சென்னையில் விற்கப்பட்டதா என அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த விசாரணையை கையில் எடுப்பதற்கு முக்கிய காரணமாகும். இந்த தங்கக்கடத்தல் மூலமாக கிடைக்கும் பணத்தை தீவிரவாத செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.

 கேரளாவில் சுங்கத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளும் நீண்ட காலத்திற்கு பிறகு பணியிடமாற்றம் பெற்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வருவதாகவும், குறிப்பாக சென்னை சுங்கத்துறையில் பணிபுரிந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அந்த பட்டியலையும் வைத்து அவர்களுக்கும் இந்த தங்கக்கடத்தலுக்கும் தொடர்புள்ளதா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Related Stories: