சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட (31ம் தேதி) ஊரடங்கு முடிவடைந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 29-ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆகஸ்டு மாதம் ஊரடங்கை நீட்டிப்பதா? புதிய தளர்வுகள் அறிவிப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட கலெக்டர்கள் அளிக்கும் ஆலோசனைகள் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழு அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 (ஆகஸ்ட் 31ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2, 9, 16, 23, 30ம் தேதி) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டது. காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. மற்ற கடைகள், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ-பாஸ் பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.