மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மலைநகரை சேர்ந்தவர் சக்திவேல் (50). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சக்திவேல், அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 5 ஆண்டுகளாக வசிக்கிறார். இவரது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு, பல ஆண்டுகளாக மின்வாரிய அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளார். பலமுறை அச்சிறுப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் அருகே மின் இணைப்பு கேட்டு போராட்டங்களும் நடத்தியுள்ளார். ஆனால், இதுவரை இவருக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் சக்திவேல், நேற்று தனது மனைவி மற்றும் மகள்களுடன் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அங்கு, அலுவலகம் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து, கண்ணில் கருப்பு துணியை கட்டி, ராந்தல் விளக்கேற்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.