சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உவரியில் கைது..!!

நாகர்கோவில்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவானதை தொடர்ந்து, அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த ஆண் நண்பருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் இருவரையும் தேடி கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது, 2 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்பட பலர் தம்மை பலாத்காரம் செய்ததாக சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து நாஞ்சில் முருகேசன் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் தலைமறைவான நாஞ்சில் முருகேசனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நாஞ்சில் முருகேசனுக்கு சொந்தமான வீடுகளை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பாலியல் புகார் வெளியானதை அடுத்து, நாஞ்சில் முருகேசனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு அவரது தாயே உறுதுணையாக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாயார் உட்பட 4 பேரை கைது செய்திருந்தார்கள். நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகியிருந்தார். கடந்த 2 தினங்களாக அவரை தேடி வந்த நிலையில் இன்று அவர் நெல்லை மாவட்டம் உவரி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாக வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: