சிக்கமகளூரு: கர்நாடக மாநிலத்தின் முத்தோடி வனப்பகுதியில் சிவப்பு நிறம் கொண்ட காட்டு மாடுகள் தென்பட்டதால் வனத்துறையினர் வியப்படைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பத்ரா புலிகள் பாதுகாப்பு முத்தோடி வனப்பகுதிக்குள் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சிவப்பு நிறத்தில் இரண்டு காட்டு மாடுகள் தென்பட்டன. இது வனத்துறையினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘வழக்கமாக காட்டு மாடுகள் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் சில நேரங்களில் வனபகுதிக்குள் வெள்ளை புலி, சிங்கம், கருஞ்சிறுத்தை என பல்வேறு நிறங்களில் வனவிலங்குகள் தென்படுவது வழக்கம். அதேபோல், தற்போது அபூர்வமாக சிவப்பு நிறத்தில் காட்டு மாடுகள் இருந்தது. அவற்றை பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது’’ என்றனர்.