வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவு: ரூ.5 கோடி கடன் பெற்று செலுத்தாத 2,426 பேரின் பெயர்பட்டியல் வெளியீடு....வாராக் கடன்களை வசூலிக்க வலியுறுத்தல்!!!

சென்னை: வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 1969ம் ஆண்டு ஜூலை 19 அன்று, நாட்டின் 16 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைந்த வரலாற்று நிகழ்வு நடந்து 51 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1955ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி என்று அறியப்படும் இன்டிரியல் வங்கி தான் முதலில் நாட்டுடைமையாக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, விவசாயிகள், சாதாரண மக்கள் பலன் பெற்றதை சுட்டிக்காட்டும் வங்கி ஊழியர் சம்மேளனம், வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

138 லட்சம் கோடி மக்கள் பணம் புழங்கக்கூடிய இந்த வங்கித்துறையை இன்றளவு இன்னும் சீராகவும், சிறப்பாகவும் நடத்த வேண்டும். ஆனால் இன்று இந்த வங்கிகளில் மிகப்பெரிய முதலாளிகள் கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். 5 கோடி ரூபாய் கடன் பெற்று செலுத்தாத 2 ஆயிரத்து 426 பேரின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடன் பெறுவோர்கள் கடனை திருப்பி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக அரசு கடனை தள்ளுபடி செய்கிறது. இதனால் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வங்கிகள் தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி, அரசின் நிறுவனம் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அரசாங்கத்தை நம்பி பணம் செலுத்தலாம் என்ற தூண்டுதல் மக்களுக்கு ஏற்பட்டது. சேமிப்பு திட்டங்கள், கடன் தேவைகள் என பொதுமக்களுக்கான சேவையாக வங்கிகள் மாறின. இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக விளங்கி பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த, அவற்றிற்கான நிதிகளை வழங்க முடிந்தது. வங்கிகள் நாட்டுடைமையானதன் விளைவாகவே விவசாயக்கடன், கல்விக்கடன் உள்ளிட்டவற்றால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்.

Related Stories: