ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்தி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்...!!!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்தி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் அம்ஷிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு  படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலை அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி  இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, வேறு தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைபோல், நேற்று காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்தி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டது.

அதில் ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்கவும், அதைக் கையாளவும் திறமை பெற்றவர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் காஷ்மீரில் மட்டும் 6  தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: