பழனி காவல் நிலையம் அருகே 2 குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!!

பழனி:  பழனியில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தர புகார் அளித்தும், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், 2 குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயன்றுள்ளார். பழனி நெய்க்காரப்பெட்டியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தஸ்லிமா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பாக தஸ்லிமா வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அப்போது அவரை வெகுநேரமாக தேடியும் காணவில்லை.

இதனால், நெய்க்காரப்பெட்டியில் உள்ள காவல் நிலையத்தில் உசேன் புகார் அளித்துள்ளார். அப்போது காவல் துறையினர் அலட்சியமாக பதிலளித்ததோடு, தஸ்லிமாவை கண்டுபிடிப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. மேலும், மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி பலமுறை உசேன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இருப்பினும் காவலர்கள் கண்டுகொள்ளாததால், விரக்தியடைந்த உசேன் தனது 2 குழந்தைகளுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர், மண்ணெண்ணையை எடுத்து தன் மீது ஊற்றியது மட்டுமால்லாமல், 2 குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், காவல் நிலையத்திற்கு அருகிலிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து தற்கொலைக்கு முயன்றவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி சிவா அவர்கள் உசேனின் புகாரை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து, 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: