ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.15,187 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.15,187 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.901.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய நிதி ஆணையத்தினை ஏற்படுத்தி மாநிலங்களிலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதியினை மானியமாக வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளிக்கும்.

மாநில அரசு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில நிதி ஆணையத்தினை ஏற்படுத்தும். இவ்வாணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவது குறித்து ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். இப்பரிந்துரைகள், 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களைப் பெருக்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் அனுமதிக்கப்பட்ட நிதியில் 75 விழுக்காடு நிதி, மக்கள் தொகை அடிப்படையில் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள அனுமதிக்கப்பட்ட நிதியில் 25 விழுக்காடு நிதி, மாநில அளவில், ஊரக வளர்ச்சி ஆணையரால் பராமரிக்கப்படும். இந்நிதியில் இருந்தும் ஊரகப் பகுதிகளில் மிகவும் அத்தியாவசியமான பணிகள் மேற்கொள்ள முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது.

Related Stories: