தாகம் தீர்க்க வந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டுமாடு: கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் தனியார் பள்ளியில் தாகம் தீர்க்க வந்த காட்டுமாடு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் நேதாஜி நகர் பகுதியில் உள்ளது தனியார் பள்ளி. இதன் வளாகத்திற்குள் பெரிய தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இதில் நேற்று தண்ணீர் குடிப்பதற்காக காட்டுமாடு கூட்டம் வந்தது. அப்போது நிலைதடுமாறி ஒரு காட்டுமாடு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. வெகுநேரமாகியும் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து காட்டுமாடு வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடியது.

இதைப் பார்த்த பள்ளி ஊழியர்கள், கொடைக்கானல் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுமாட்டை உயிருடன் மீட்பதற்கு போராடினார். நீருக்குள் மூழ்கும் நிலையில் உயிருக்கு போராடிய காட்டுமாட்டை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: