தெலங்கானா கவர்னர் தமிழிசைக்கு கொரோனா தொற்று இல்லை

சென்னை: தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன், தற்போது அங்குள்ள கவர்னர் மாளிகையில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றி வரும் 10 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, கவர்னர் மாளிகையில் பணியாற்றிய போது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கவர்னர் மாளிகைக்குள் கொரோனா வைரஸ் புகுந்திருப்பதால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு நேற்று காலை வெளியானதில், தமிழிசைக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, தமிழிசை நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. சிவப்பு மண்டலத்தில் உள்ள மக்களும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் விரைவாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சீக்கிரமாக பரிசோதிப்பது நம்மை மட்டுமல்ல, மற்றவர்களையும் காக்கும். தயக்கம் வேண்டாம். நீங்கள் பரிசோதனை செய்து கொண்டு மற்றவர்களையும் ஊக்குவியுங்கள்’’ என கூறியுள்ளார்.

Related Stories: