தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,30,662 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ.17,84,47,876 அபராதம் வசூல்..!!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,30,662 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 8,41,230 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸானது பரவி அனைத்து மக்களையும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. தற்போது, இந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் படையெடுக்க தொடங்கியுள்ளது. இதனால், இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் பின்னர், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கொரோனா தொற்றானது, மக்கள் அனைவரும் வெளியில் நடமாடுவதால்தான் அதிகளவு பரவுகிறது என்பதால் பேருந்து போக்குவரத்து, ரயில் சேவைகள், விமான சேவைகள் என அனைத்தையும் அரசு முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அப்போதும் வெளியே வருபவர்கள் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்களில் பலர் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர்.  இதேபோன்று வாகனங்களில் சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென அரசு தெரிவித்துள்ளது.  தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8 லட்சத்து 41 ஆயிரத்து 230 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு விதிகளை மீறி  7 லட்சத்து 66 ஆயிரத்து 717 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.17,84,47,876 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: