சென்னை காவல்துறை எல்லை பகுதிகளில் 10% பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம்: தமிழக அரசு அனுமதி

சென்னை: பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்டபகுதிகளில் ஐடி நிறுவனங்கள், அவர்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசியபேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.20 முதல் அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதை தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தற்போது பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்த நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: