8 போலீசாரை சுட்டுக் கொன்ற துபே டெல்லியில் பதுக்கல்?: துபேயை பிடிக்க 25 தனி போலீஸ் படைகள் தீவிர தேடுதல் வேட்டை!!!

லக்னோ: உத்திரபிரதேச போலீசாரால் தேடப்படும் தாதா விகாஷ் துபே டெல்லி அருகே ஓட்டலுக்குள் சென்றது தெரியவந்ததை அடுத்து, தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 8 போலீசாரை கொடூரமாக சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியை ஒட்டியுள்ள பரிதாபாத் நகரில் ஓட்டல் ஒன்றிற்கு துபே தனது கூட்டாளியுடன் சென்றுள்ளார்.

இது சம்பந்தமான காட்சிகள் வெளியானதை அடுத்து, பரிதாபாத் ஓட்டலுக்கு உத்திரபிரதேச போலீசார் விரைந்தனர். ஆனால் போலீசார் ஓட்டலுக்கு சென்றடைவதற்கு முன்பே துபே அங்கிருந்து தப்பிவிட்டார். ஆனால் ஹோட்டலில் இருந்த துபேயின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். மேலும் துபே டெல்லியில் பதுங்கி இருக்கலாம் என்பதால் உத்திரபிரதேச போலீசார் தலைநகரில் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே உத்திரபிரதேசத்தில் அமிர்பூர் மாவட்டத்தில் விகாஷ் துபேவின் நெருங்கிய கூட்டாளி அமர் துபே போலீசாரால் நடத்தப்பட்ட என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 3ம் தேதி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் 8 பேரை விகாஷ் துபே கொடூரமாக சுட்டு கொன்றதால் துபே பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு  இரண்டரை லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்திரபிரதேச அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: