கோவை: கோவை விமானம் நிலையத்தின் அருகே முழு ஊரடங்கான நேற்று சரக்கு விற்பனை ஜோராக நடந்தது. முழு ஊரடங்கையொட்டி, அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி ரோடுகளில் போலீசார் முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை மேற்கொண்டனர்.கோவை விமானநிலையத்தின் அருகே 5க்கும் மேற்பட்ட போலீசார் சாலையில் தடுப்புகளை அமைத்து ஒரு வழிபாதையாக மாற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போலீசார் நின்றிருந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை நேற்று ஜோராக நடந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த குடிமகன்கள் பலர் வாங்கி சென்றனர். சிலர், ஹெல்மெட்டுகளில் குவாட்டர் பாட்டில்களை பதுக்கி எடுத்துச்சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இதே போல், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடை, குனியமுத்தூர் மணல் மார்க்கெட் டாஸ்மாக் கடைகளிலும் சரக்கு விற்பனை நடந்தது.