திருப்பூர்: இந்த கொரோனா காலத்திலும் தொடர்ந்து தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்வர்கள் மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தான். அவர்களின் அன்றாட பணிகளில் இருக்கும் கடமை உணர்வு தான் இன்று நம் அனைவரையும் பாதுகாக்கிறது. ஆனால் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் யார் மனதிலும் எழாமல் இல்லை. இறந்து போன மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கும் மக்களே இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் அவலநிலைக்கு எடுத்துக்காட்டாக தூய்மை பணியாளர் ஒருவர் குப்பை தொட்டியில் குழந்தையை அமர வைத்துக்கொண்டு பணியாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.