குப்பை கூடையில் குழந்தையை அமர வைத்துக்கொண்டு பணி..: திருப்பூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் அவலம்

திருப்பூர்: இந்த கொரோனா காலத்திலும் தொடர்ந்து தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்வர்கள் மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தான். அவர்களின் அன்றாட பணிகளில் இருக்கும் கடமை உணர்வு தான் இன்று நம் அனைவரையும் பாதுகாக்கிறது. ஆனால் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் யார் மனதிலும் எழாமல் இல்லை. இறந்து போன மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கும் மக்களே இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் அவலநிலைக்கு எடுத்துக்காட்டாக தூய்மை பணியாளர் ஒருவர் குப்பை தொட்டியில் குழந்தையை அமர வைத்துக்கொண்டு பணியாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த சுஜா என்பவர், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது 3 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு சுஜா துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார். குழந்தையை வீட்டுக்கு செல்ல இடமில்லாததால் குப்பை கூடையில் அமர வைத்து அவருடன் அழைத்து சென்றுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் எவ்வித உபகரணங்களும் இன்றி சுஜா துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வு காண்போர் மனதை கலங்க வைத்துள்ளது. கொரோனா பரவல் காலத்திலும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் இருக்கும் அவலநிலையை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

Related Stories: