சென்னை: சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மூடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று புதிய உச்சம் பெற்று வருகிறது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,689க்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும், கொடூர கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,009-ஆக உயர்ந்துள்ளது. இதனால், அரசு அதிகாரிகள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி முழுவதும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.