சென்னை: சட்டக்கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ₹3 ஆயிரம் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வது சட்டம். இப்படிப்பட்ட சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் வழக்கறிஞர்கள்.
வழக்கறிஞர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட அரசு, வழக்கறிஞர்களின் நலன் கருதி இறந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நல உதவி வழங்கிடும் திட்டத்தை முதன்முதலில் எம்ஜிஆர் 1987ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த நிதி உதவித்தொகையை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5.25 லட்சம் ரூபாயாக கடந்த 2012ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 30.1.2018 அன்று, இந்த நலநிதியை ₹5.25 லட்சத்தில் இருந்து ₹7 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டேன். சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.