சென்னை: கடந்த மே 8ம் தேதியே 25 லட்சம் லிட்டர் பால் விற்பனையை எட்டிய நிலையில், தற்போது ஆவின் பால் விற்பனையில் சாதனை என்பதே ஒரு முறைகேடு என்று பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 13 லட்சம் லிட்டரும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 12.03 லட்சம் லிட்டரும் என ஆக மொத்தம் தமிழகத்தில் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து “ஆவின் நிறுவனம் வரலாற்று சாதனை” படைத்திருப்பதாக வந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. மேற்கண்ட விற்பனை இலக்கான நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் என்பதை கடந்த மே 8ம் தேதியே எட்டியதாக ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தார். அதிலும் அந்த அறிக்கையில் நாளொன்றுக்கு 24 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக விற்பனை அதிகரித்து மிகப்பெரிய சாதனை படைத்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த மார்ச் 5ம் தேதி நாளொன்றுக்கு சென்னையில் 12.95 லட்சம் லிட்டரும், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 11.37 லட்சம் லிட்டரும் ஆவின் பால் விற்பனையாகி 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனை படைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.