புதுடெல்லி: கொரோனா தொற்று மோசமானது அல்ல என்ற கண்ணோட்டத்தை மக்களிடையே ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள் தினத்தையொட்டி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டெல்லியில் பணியாற்றும் இந்திய செவிலியர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி மூலம் நேற்று 30 நிமிடங்கள் உரையாடினார். பின்னர், அவர் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிராக மக்களை பாதுகாக்க ஆயுதமின்றி போராடும் மருத்துவர்கள் அனைவரும் அகிம்சையின் ராணுவ வீரர்கள். இவர்களிடம் பேசிய போது, டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர் விபின் கிருஷ்ணன் தெரிவித்தார்.