நெய்வேலி என்.எல்.சி-யில் பாய்லர் வெடித்த விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு; 17 பேர் காயம்...மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி யில் 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஊழியர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 என்.எல்.சி நிறுவனத்தில் பாதுகாப்பு பணி என்பது மெத்தமனாக இருப்பதும், அதிகளவு வேலை செய்யப்படுகிறது என்பதும் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், ஊழியர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

தொடர் விபத்து;

நெய்வேலி என்.எல்.சி யில் 2வது அனல் மின் நிலையத்தில், 2 மாதத்தில் 4 முறை தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதேபோல் கடந்த மே மாதம் இதே அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்துள்ளானது. அதில் 8 தொழிலாளர்கள் தீக்காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவற்றில் 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: