வெளி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க முடியாது; சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!!

சென்னை: வெளி மாவட்டகளுக்கு மின் கட்டண கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சி.ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் மின்கட்டணம் செலுத்த வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படவில்லை.

இதனால் மக்களின் பணப்புழக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தைச் செலுத்த உத்தரவிட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஜூன் 15ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் இன்று மீண்டும் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ்,வெளி மாவட்டங்களிலும் மின் கட்டணத்தை செலுத்த ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வெளி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும் ,மேலும் 75 சதவீதம் பேர் மின் கட்டணம் செலுத்தியதற்கான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

Related Stories: