சென்னை: சாலை வரி தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் வரும் ஜூலை 6-ம் தேதி வரை எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் லாரிகளின் இயக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மாா்ச் முதல் மே வரையிலான மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த கோரிக்கையை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது, தமிழகத்தில் அனைத்து வாகனங்களும் கொரோனா பாதிப்பு காரணமாக அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவால் இயங்கவில்லை என்பதால் சாலை வரியை செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் மனுவில் தெரிவித்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
தமிழக அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் வழங்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி மகாதேவன் வரும் ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.