திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 30 சதவீதமாக குறைக்கப்பட்டு வழங்கப்படுவதால், ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. பொது வினியோக திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட கூட்டுறவு அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இந்த ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாதம்தோறும் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில், வட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கருத்துரு அனுப்புகின்றனர். இதன் அடிப்படையில் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நுகர்பொருள் வாணிபக்கிடங்கு மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில், மண்ணெண்ணெய் வினியோகமும் பொது வினியோக திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, மண்ணெண்ணெய் பற்றாக்குறையாகவே ஒதுக்கீடு செய்யப்படுவதாக ரேஷன்கடை ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். தற்போது, இந்த அளவும் குறைக்கப்பட்டு 30 சதவீதம் மட்டுமே வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.