திருத்தணி: திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர், ஆந்திரா வங்கி ஊழியர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருத்தணி நகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 29 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் உள்பட 3 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் நோய்தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் தனியார் மருத்துவமனையிலும் மற்ற இருவர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்தில், எஸ்ஐக்கள் உட்பட போலீசார் பணியில் உள்ளனர். இதில், 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மற்ற போலீசாருக்கு நேற்று பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகளை போலீசார் எதிர்பார்த்து உள்ளனர். இதையடுத்து மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில் மப்பேடு போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, காவல் நிலைய நுழைவு வாயில் கேட் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. போலீசார் மற்றும் பொதுமக்கள் யாரும் காவல் நிலையத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.