ஜம்மு காஷ்மீரில் அதிகரிக்கும் தீவிரவாத ஊடுருவல்; அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புபடையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பாதுகாப்புபடையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனிடையே இந்த ஆண்டு தொடக்கம் முதல் பாதுகாப்புப் படையினர்  நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குல்ச்சோகர் பகுதியில்  பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புபடையினர் நடத்திய தாக்குதலில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள்  பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும், இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் தேடுதல் வேட்டையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு  படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: