முகக் கவசம் தயாரிக்கும் மாற்றுத்திறன் மாணவிக்கு பாராட்டு

உடுப்பி: கர்நாடகாவில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் முகக்கவசங்கள் தயாரித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் உதவும் மனப்பான்மை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த சிந்தூரி (10) என்ற மாற்றுத்திறனாளி மாணவி பலருக்கும் முன்மாதிரியாக உள்ளார். கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதனால் மாணவி சிந்தூரி படிக்கும் பள்ளியில் உள்ள சாரணர் அமைப்பினர் முகக்கவசம் தயாரிக்க முடிவெடுத்தனர்.

அந்த இயக்கத்தில் ஒருவரான சிந்தூரி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற நினைத்து, தனது ஒற்றைக் கையில் தையல் இயந்திரத்தின் மூலம் 15 முகக்கவசங்கள் தைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி சிந்தூரி கூறுகையில், ‘தொடக்கத்தில்  ஒரு கையுடன் தைக்க சிரமமாக இருந்தது. பின்னர் எனது அம்மாவின் உதவியுடன் முகக் கவசங்களை தைக்கும் வேலையை கற்றுக் கொண்டு எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடித்தேன். தற்போது பலரும் என்னை பாராட்டுகின்றனர். பெருமையாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது’ என்றார்.

Related Stories: