ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், புவனேஸ்வரி தம்பதியருக்கு ஜூன் 8-ம் தேதி அறந்தாங்கி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வலது முழங்கால் பகுதியில் ஒரு ரத்தக்கட்டி இருந்ததால் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நுண்கதிர் மருத்துவர் ஸ்டாலின், இதய நோய் நிபுணர் நாச்சியப்பன், மயக்க மருத்துவத் தலைமை மருத்துவர் சாய்பிரபா, குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்ரமணியம், தலைமை குழந்தை மருத்துவர் இங்கர்சால், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், அக்குழந்தைக்கு அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் எக்கோ உள்ளிட்ட கருவிகள் மூலம் பரிசோதனைகள் செய்த பின்னர் 18-ம் தேதி 3 மணிநேர அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்குப் பிறகு ரத்தநாளக் கட்டி அகற்றப்பட்டது.