சென்னை: போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி திரிபாதி அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களில் தந்தை 22ம் தேதியும் மகன் 23ம் தேதியும் மருத்துவமனையில் இறந்துள்ளனர். அவர்கள் இருவரும் போலீசார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும், சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற கைதிகளை தனிமை முகாமுக்கு அனுப்ப போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் காவல் துறைக்கு கடினமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கைது செய்யப்படும் குற்றவாளிகளை வைப்பதற்காக உரிய வசதிகளுடன் கூடிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த இடங்களை துணை நிலையங்களாக பயன்படுத்த வேண்டும். உரிய இடம் கிடைக்கவில்லை என்றால் உதவி கமிஷனர்கள், டிஎஸ்பிக்கள் வீட்டிலிருந்து பணி செய்யலாம், அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களிலிருந்து பணிகளை மேற்கொள்ளலாம். இந்த தற்காலிக கட்டிடங்களில் ஒரு இன்ஸ்பெக்டர் அந்தஸ்து அதிகாரியை உதவி கமிஷனர்கள் நியமிக்க வேண்டும். காவல் துறையினர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு வீடியோ பதிவு செய்ய வேண்டும். இதற்காக போலீஸ் கமிஷனர், எஸ்பிக்கள், உதவி கமிஷனர்கள், டிஎஸ்பிக்கள் இதுதொடர்பாக உரிய ஏற்பாடுகளை செய்து அதை சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.