திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆற்றின் குறுக்கே பாலப்பணிகள் நடைபெற்று வருவதால், குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கிடைக்காமல் 9 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதித்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், அந்த தண்ணீருக்காக காத்திருந்த திருவாரூரிலுள்ள பலவனக்குடி, கேக்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. தண்டலை மற்றும் மருதப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இப்பகுதிக்கு வராததால், 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாதித்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.