இந்தியாவில்,1 லட்சம் மக்கள்தொகைக்கு ஒருவர் வீதம் கொரோனாவுக்கு பலி, இது உலக அளவில் மிகக்குறைவு தான் : மத்திய அரசு

புதுடெல்லி : இந்தியாவில்,1 லட்சம் மக்கள்தொகைக்கு ஒருவர் வீதம் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது, உலக அளவில் மிகக்குறைவு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு, உரிய நேரத்தில் தொற்றுகளை கண்டறிதல், அவர்களின் தொடர்புகளை கண்டறிதல், திறமையான சிகிச்சை முறை ஆகியவையே காரணம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, இது 56.38 சதவீதமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு, கடந்த 22-ந் தேதி ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகஅளவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் இந்தியாவில்தான் மிகக்குறைவு என்று தெரிய வந்துள்ளது. அந்த அறிக்கையில், உலக அளவில் கொரோனா உயிரிழப்பின் சராசரி அளவு, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 6.04 என்ற விகிதத்தில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு ஒருவர் வீதம்தான் இறந்துள்ளனர்.மற்ற நாடுகளை பொறுத்தவரை, இங்கிலாந்தில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 63.13 பேரும், ஸ்பெயின் நாட்டில் 60.60 பேரும், இத்தாலியில் 57.19 பேரும், அமெரிக்காவில் 36.30 பேரும், ஜெர்மனியில் 27.32 பேரும், பிரேசில் நாட்டில் 23.68 பேரும், ரஷியாவில் 5.62 பேரும் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவே கடந்த ஜூன் 2ம் தேதி நிலவரப்படி, உலக அளவில் கொரோனா உயிரிழப்பின் சராசரி அளவு, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 4.9 என்ற விகிதத்தில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 0.41 என்ற விகிதத்தில் இறந்துள்ளனர்.இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,215-லிருந்து 4,56,183-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,011-லிருந்து 14,476-ஆகவும்  கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190-லிருந்து 2,58,685-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: