திண்டிவனம் அருகே இ-பாஸ் பெறாமல் பயணம் 4 வேன்கள் அதிரடி பறிமுதல்: 58 பேர் தனிமை முகாமில் அடைப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே இ-பாஸ் பெறாமல் வந்த 4 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 58 பேர் கொரோனா சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்எடையாளம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம், கடப்பேரியில் உள்ள தனது உறவினரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக 4 வேன்களில் கீழ் எடையாளம், ஜக்காம்பேட்டை, சிங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று வீடு திரும்பிய வேன்கள் விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் தற்காலிக சோதனைச்சாவடியில் வந்தபோது, அங்கு பணியில் இருந்த காவலர்கள் வேன்களை சோதனை செய்தனர். அப்போது, இ-பாஸ் பெறாமல் வந்தது தெரியவந்தது. மேலும் வேனில் வந்த டிரைவர்கள் உட்பட  58 பேரும் முகக் கவசம் அணியாமல் வந்ததாக தெரிகிறது. இதனால் அனைவரும் திண்டிவனத்தில் உள்ள கொரோனா சிறப்பு தனிமை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்தில் உரிய அனுமதி இன்றி வாகனம் இயக்கப்பட்டதால் 4 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு திண்டிவனம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: