உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை விடுதலை; 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு...சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!

சென்னை: உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைந்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர்.  அவரது மனைவி கவுசல்யா மீது கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சங்கர் பலியானார். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின்  தந்தை சின்னசாமி, பழநி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன்  என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கிலிருந்து கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை, கல்லூரி மாணவன் பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதே நேரத்தில், வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க கோரியும் போலீசார் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள்  அனைத்தையும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.  கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலை உறுதி செய்யப்பட்டது. வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க கோரி போலீசார் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டது.

Related Stories: