புதுச்சேரி: கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது. இந்தியளவில் புதுச்சேரி மாநிலம் 27-வது இடத்தில் உள்ளது. புதுச்சேரியில் இதுவரை 286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 161 பேர் சிகிச்சையில் உள்ளனர். 118 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். அவை பின்வருமாறு...
* முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.200 அபராதம். * புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் படுக்கைகளை ஒதுக்கி தர உத்தரவு* உணவு விடுதிகளில் 2 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம். * உணவு விடுதிகளில் இரவு 9 வரை பார்சல் வழங்க அனுமதி. * புதுச்சேரி கடற்கரைக்கு 10 நாட்களுக்கு யாரும் செல்ல அனுமதியில்லை.* தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி. * பெரிய மார்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி அங்காடி புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம். * கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட நடைபயிற்சிக்கு அனுமதி ரத்து. * நாளை முதல் புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் மதுக்கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி.