சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நிர்வாக அலுவலகத்தில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருந்ததால், அவர்கள் பணியாற்றிய அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் நிர்வாக அலுவலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ளது. இங்கு, பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் உடனடியாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.