சென்னை: சமூக இடைவெளி பிரச்னையால் மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள தற்காலிக பழ மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து போலீசாரிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவலை தடுக்க கோயம்பேட்டில் இயங்கி வந்த பழ மார்க்கெட், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இங்கு தற்போது பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், சமூக இடைவெளியை காரணம் காட்டி, இந்த பழ மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு சில்லறை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை பழங்கள் வாங்குவதற்கு இங்கு வந்த சில்லறை வியாபாரிகளை போலீசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சில்லறை வியாபாரிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.