நெல்லை அரசு மருத்துவமனை ஊழியர் கொரோனாவுக்கு பலி டாக்டரிடம் வீடியோ காலில் பேசியவர் திடீரென இறந்தார்

நெல்லை: நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம்  2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் அரசு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 34 வயது இளைஞரும் ஒருவர். இவர் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கொங்காராயகுறிச்சி. பாளை சாந்திநகரில் வசித்து வந்தார். திருமணம் ஆகவில்லை. முதுநிலை வேதியியல் பட்டதாரியான இவர், கடந்த சில மாதங்களாக ஜிஹெச்சில் பணியாற்றி வந்தார்.

கடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தொற்று உறுதியானதையடுத்து 12ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் டாக்டரிடம் வீடியோ காலில் பேசினார். தனது உடல் நலம் குறித்து கேட்டுள்ளார். பின்னர் திடீரென உடல்நலம் குன்றி மூச்சு திணறல் ஏற்பட்டு மாலையில் இறந்துள்ளார். ஏற்கனவே நுரையீரல் பிரச்னை இருந்த நிலையில் அவரை மீட்க முடியவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை பாளை மிலிட்டரி லைன் பொது அடக்கஸ்தலத்தில் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: