உலகின் டாப் 10 பணக்காரர்களில் இடம்பிடித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி!!

மும்பை : உலகின் 10 மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 64.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதை தொடர்ந்து ப்ளூம்பர்க் பணக்காரர்கள் பட்டியலில், உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல், ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எல்லிசன், பிரான்ஸ் நாட்டின் பிரான்காய்ஸ் பெட்டென்கோர்ட் மேயர்ஸ் போன்ற ஜாம்பவான்களையும் முந்தி முகேஷ் அம்பானி 9ம் இடத்தைப் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானிக்கு 42% பங்குகள் இருக்கின்றன.

கடந்த சில வாரங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், அபுதாபி முதலீட்டு ஆணையம் என வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ஏராளமான முதலீடுகள் குவிந்துள்ளன. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் ரூ.11 லட்சம் கோடியை தொட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை நேற்று 6% உயர்ந்தது. கொரோனா ஊரடங்கால் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்தும், தொழில்களில் இழப்பை சந்தித்தும் வருகின்றனர். பெரும் நிறுவனங்களும், பணக்காரர்களும் இழப்பை சந்தித்துள்ளனர். ஆனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல் அவரது நிறுவனங்களும் செழிப்பாக முன்னேறி வருகின்றன. இதனால் முகேஷ் அம்பானியை முதலீட்டாளர்களும், பங்குதாரரகளும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்து வந்த நிலையில், தற்போது உலகின் முதல் 10 மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.  இதன்படி, உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் ஆசியாவிலிருந்து இடம்பெற்ற முதல் நபரும் முகேஷ் அம்பானியே ஆவார்.

Related Stories: