பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே தொழில் போட்டியில் லாரி டிரைவரை கடத்திய கிளீனர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை தேடுகின்றனர். வேலூரை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (47). இவர், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் தங்கி சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லியிலிருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தார். பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் லாரியை மடக்கினர். கோடீஸ்வரனை தாக்கி வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதுகுறித்து லாரியில் இருந்த மற்றொரு டிரைவர் டில்லிபாபு, கிளீனர் அன்பு ஆகியோர் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் சென்ற போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து டில்லிபாபு, அன்புவிடம் நடத்திய தீவிர விசாரணையில், சென்னீர்குப்பத்தை சேர்ந்த இந்து (எ) தாஸ் (28), காடுவெட்டியை சேர்ந்த விமல் (29) உள்ளிட்ட கும்பல் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோட்டீஸ்வரனை மீட்டனர்.