தேவாரம்: தேவாரம் அருகே காட்டு யானை தாக்கியதில் இறந்ததாக கருதப்பட்ட தொழிலாளி, உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி(60). விவசாயி. கேரள மாநிலம், உடும்பஞ்சோலையில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்டை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். வருசநாடு அருகே பொன்னன்படுகையை சேர்ந்தவர் ராஜாங்கம்(58). கூலித்தொழிலாளி. நேற்றுமுன்தினம் மாலை இருவரும் சாக்குலூத்து வனப்பகுதி வழியாக கேரளாவிற்கு கிளம்பினர். மாலை 5 மணியளவில் கேரள மாநில எல்லையில் உள்ள உடும்பஞ்சோலையை நெருங்கியபோது, அப்பகுதியில் உள்ள செக்போஸ்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருப்பதை கண்டனர். இதனால் இருட்டிய பின்னர் வனப்பகுதியிலிருந்து வெளியேறலாம் என அப்பகுதியிலேயே 2 பேரும் பதுங்கிக் கொண்டனர். இரவு 7 மணியளவில் திடீரென அங்கு வந்த காட்டு யானை, இருவரையும் தாக்க முயன்றது. யானையின் பிடியிலிருந்து முனியாண்டி தப்பியோடி விட்டார். ராஜாங்கம் அருகில் உள்ள புதருக்குள் ஒளிந்து கொண்டார்.