டெல்லி: 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் சபாநாயகர் விரைந்து செயல்பட்டு முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது துணை முதலமைச்சராக இருக்கின்ற ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை 15 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. கடந்த 2016ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் காலமானதை தொடர்ந்து 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தார்கள் என்பது புகார். தொடர்ந்து 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயக்கரிடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், சென்னை உயர்நீதிமன்றத்தை திமுக நாடியது. தொடர்ந்து, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திமுகவின் சார்பில் சக்கரபாண்டி மற்றும் அப்போது டிடிவி தினகரன் தரப்பில் இருந்த 7 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தார்கள்.