சென்னை: கொரோனா அச்சத்தில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பைக்கில் சென்ற ஏராளமானோரை செங்கல்பட்டு சுங்கசாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். சென்னையில் கொரோனா தொற்று காரணமாக 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 294 பேர் இறந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் இறந்துள்ளனர். இதனால் பீதியடைந்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள், உயிர் பயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல குடும்பம் குடும்பமாக பைக், கார், ஆட்டோக்களில் திருச்சி, விழுப்புரம், மதுரை, அரியலூர், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை நோக்கி நேற்று காலை முதல் சென்றனர். அவர்களை செங்கல்பட்டு மற்றும் வண்டலூர் சுங்கச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.