கராச்சி: கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, பந்தை பளபளப்பாக்க எச்சில் உபயோகிக்க தடைவிதித்திருப்பது பந்துவீச்சாளர்களை ரோபோக்களாக்கி விடும் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் வேகம் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: வேகப் பந்துவீச்சுக்கு அழகே பந்து காற்றில் ஊசலாடியபடி வந்து எப்படி திரும்பப்போகிறது என்றே கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டுவது தான். பந்தை பளபளப்பாக வைத்திருக்க எச்சிலை உபயோகிக்கக் கூடாது என்று தடை விதித்திருப்பதால் ஸ்விங் செய்வது மிக மிகக் கடினமாகிவிடும். பந்துவீச்சாளர்கள் எந்திர மனிதன் போல வந்து எந்த ஸ்விங்கும் இல்லாமல் கடனே என்று பவுல் செய்ய வேண்டியிருக்கும்.